கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உரிய காலத்தில் மனு கொடுத்து நிவாரணம் பெறலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-06 17:12 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உரிய காலத்தில் மனு கொடுத்து நிவாரணம் பெறலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருணைத்தொகை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்காக www.tn.gov.in என்கிற இணையத்தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த மனுக்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 74 ஆயிரத்து 97 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 55 ஆயிரத்து 390 மனுக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13 ஆயிரத்து 204 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்கிற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. தற்போது நிவாரண தொகை பெற தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளது.
மனுக்களை கொடுக்க வேண்டும்
அதன்படி, கடந்த மார்ச் 20-ந் தேதிக்கு முன்பு கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும், மனுதாரர்கள் வருகிற மே மாதம் 15-ந் தேதிக்குள் மனுக்களை சமர்பிக்க வேண்டும். மார்ச் 20-ந் தேதிக்கு பிறகு கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள், இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்பிக்க வேண்டும்.
மனுக்கள் மீது தொடர்புடைய நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவாரணம் கேட்டு மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்