பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
மயிலாடுதுறை:
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடடுள்ளது.
அதன்படி அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.
முதல் பரிசு ரூ.5 ஆயிரம்
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர், அவர்தம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க 25 மாணவர்களுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும்.
13-ந்தேதிக்குள்...
போட்டிகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை adtdnagai@gmail.com என்ற இ.மெயில் முகவரியிலோ அல்லது நேரிலோ, அஞ்சலிலோ வருகிற 13-ந்தேதிக்குள் (புதன்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு காலை 11.30 மணிக்கும் போட்டி தொடங்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----