தோகைமலை,
தோகைமலை அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சியில் தூய்மை பாரத் இந்தியா இயக்கம், நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில், எழில்மிகு கிராமங்களை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் கிராம மக்களுடன் சுகாதார நடை பயணம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
ஊர்வலம் சின்னியம்பாளையம் கடைவீதியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தோகைமலை ஒன்றிய ஆணையர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, துணைத்தலைவர் தனலட்சுமி, தூய்மை பாரத் இந்திய வட்டார ஒருங்கிணைப்பாளர் மாலதி, ஊராட்சி செயலாளர் போதுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.