கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகள் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-04-23 16:49 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகள் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்களுடைய குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்டங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கி வரும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளின் தரத்தை உயர்த்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகரலப்பள்ளி, ராயக்கோட்டை, கல்லாவி, மத்தூர், மத்திகிரி, கிருஷ்ணகிரி அரசு கல்லூரி ஆகிய 5 மாணவிகள் விடுதிகள், 2 மாணவர் விடுதிகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, உதவி கலெக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அடிப்படை வசதிகள் 
தொடர்ந்து அவர்கள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி மாணவர் விடுதி, மேகலசின்னம்பள்ளி, கல்லாவி, போச்சம்பள்ளி, ஓசூர், ஊத்தங்கரை, தளி, ராயக்கோட்டை, பர்கூர், ஆலப்பட்டி, நாகரசம்பட்டி, மதகொண்டப்பள்ளி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 26 மாணவ-மாணவிகளின் வீடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த விடுதிகளில் அடிப்படை வசதிகளான அறைகள், மின்சார வசதி, உணவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், சுற்றுச்சுவர் குறித்து ஆய்வு நடத்தினார்கள். மேலும் மாணவ-மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்