கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் பணம் திருடு போனது.

Update: 2022-04-24 17:39 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகரை சேர்ந்தவர்  ராமலிங்கம் (வயது 65). இவரது  மனைவி சாமியம்மாள்.  ராமலிங்கம்  எல்.ஐ.சி. முகவராக உள்ளார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டனர். 

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு இவர்களது வீட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர்,  ராமலிங்கத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து அவர், கள்ளக்குறிச்சி  போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். 

அப்போது வீட்டின் கதவு பூட்டு, பீரோ பூட்டு ஆகியன உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருட்கள்  சிதறி கிடந்ததுடன்,  ரூ. 28 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.  

மேலும் துணியின் உள்ளே மறைத்து வைத்திருந்த 12 பவுன் நகை, ரூ.20  ஆயிரம் பணம் ஆகியன அங்கேயே கிடந்தது. இதனால் ராமலிங்கம் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

இதேபோல் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்று  இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்