முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை

பொதுவினியோக திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-04-28 17:10 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர்களுடனான கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பொது வினியோக திட்ட கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், நுகர்வோர் அமைப்பினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும்.
 மேலும் உணவகங்களில் உணவுப்பொருட்கள் கலப்படம் தொடர்பாக நுகர்வோர் அமைப்பினர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். உணவு பொருட்களின் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது ஆதாரப்பூர்வமாக கலப்படம் செய்வது தெரியவந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும், உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

தரமான உணவு பொருட்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வினியோகத்திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உணவுபொருட்களும் தரமாகவும், தங்குதடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் சரியான அளவிலும், தரமாகவும் வழங்க வேண்டும். 
குடும்ப அட்டை கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வட்ட வழங்கல் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

 பொதுவினியோக திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையதுஅப்துல்பாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜவேல், கள்ளக்குறிச்சி நுகர்வோர் சங்க செயலாளர் அருன்கண்ணாடி மற்றும் அரசு அலுவலர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்