பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவருக்கு நூதன தண்டனை

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவருக்கு நூதன தண்டனையை திருவள்ளூர் கோர்ட்டு வழங்கியது.

Update: 2022-04-29 16:03 GMT
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்தவர் 18 வயது சிறுவன். இருவரும் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி மாயமாகி விட்டதாக அவரது தாயார் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சிறுவன் அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பி வந்தார். அவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாணவி தனது தாயாருடன் செல்வதாக கூறியதால் அவரை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட சிறுவனை சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

இந்த வழக்கு பற்றிய விசாரணை திருவள்ளூர் சிறார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் ஒரு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பணி செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கினார். தாயுடன் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி மாணவி வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் குழந்தை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை அவரது உறவினர்கள் மாணவனின் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர்.

மேலும் செய்திகள்