விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-29 16:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55), தொழிலாளி. இவருடைய 2 மனைவிகளும் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டனர். 

மகன், சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சேகர் மட்டும் திருப்பாச்சனூரில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டின் முன்பக்க, பின்பக்க கதவுகளை பூட்டிவிட்டு காற்றுக்காக வீட்டின் முன்புற வளாகத்தில் படுத்து தூங்கினார்.

நகை- பணம் கொள்ளை

அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், சேகர் வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இதனிடையே நேற்று காலை சேகர் தூங்கி எழுந்ததும் நகை- பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.  உடனே இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 


கொள்ளைபோன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2¼ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்