எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார்

Update: 2022-04-29 17:00 GMT
தாவணகெரே: எஸ்.ஐ. ேதர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார். 

எஸ்.ஐ.தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் எஸ்.ஐ. தேர்வு முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பா.ஜனதா பிரமுகர் திவ்யா காகரகி கைது செய்யப்பட்டுள்ளார். 18 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் நேற்று மராட்டிய மாநிலம் புனேயில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்துள்ளனர். 
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் கூடுதலாக 2 லட்சம் டன் ராகி கொள்முதல் செய்யப்படும். இதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்படும். சில மாவட்டங்களில் ராகி கூடுதலாக சாகுபடி ஆகியுள்ளது. 

கடும் நடவடிக்கை

அதனால் விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனால் கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது.

பேராசிரியர்கள் நியமனம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.ஐ.) தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சி.ஐ.டி. விசாரணை நடக்கிறது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

பணி நியமன தேர்வுகள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை போல் இங்கும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு முறைகேடு விவகாரத்தை அரசே கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறது. பணி நியமன தேர்வுகள் நேர்மையாக நடைபெற வேண்டும். இதை அரசு வரும் நாட்களில் உறுதி செய்யும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்