சாலையோரம் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா உத்தரவு

சாலையோரம் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை உடனே அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-04-29 22:20 GMT
பெங்களூரு:

கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள்

  பெங்களூரு மாநகராட்சி என்ஜினீயர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கவுரவ்குப்தா பேசியதாவது:-
  பெங்களூருவில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்த உடனேயே அதன் மீது என்ஜினீயர்கள் நடவடிக்கை எடுத்தால் அதன் மூலம் மாநகராட்சிக்கு நற்பெயர் கிடைக்கும். அதனால் நீங்கள் உங்களின் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். நகரை தூய்மையாக வைத்து கொள்வது நமது கடமை. பொதுமக்கள் குறைகளை கூற ஒரு செயலியை உருவாக்கி உள்ளோம்.

  சாலைகள், வீதிகளில் கேட்பாரற்று ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாாரிகள் போலீசார் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை வேண்டும். இதன் மூலம் நகரின் அழகு மேலும் அதிகரிக்கும்.
  இவ்வாறு கவுரவ்குப்தா பேசினார்.

போக்குவரத்து நெரிசல்

  கூட்டத்தில் கலந்து கொண்ட நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேசும்போது கூறியதாவது:-
  பெங்களூருவில் சாலைகள், வீதிகள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் கேட்பாரற்று வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நகரின் அழகு கெடுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மாநகராட்சி மற்றும் போலீஸ் இணைந்து பணியாற்றினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

  பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலை பள்ளங்கள், தெருவிளக்கு பிரச்சினை குறித்து மாநகராட்சி செயலியில் புகைப்படத்துடன் பதிவிட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  இவ்வாறு கமல்பந்த் கூறினார்.

மேலும் செய்திகள்