விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்: கஞ்சாவுடன் வந்த 2 பேருக்கு வலைவீச்சு

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் கஞ்சாவுடன் வந்த 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனா்.

Update: 2022-05-01 17:59 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை மெயின் ரோடில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி, விபத்தில் சிக்கியது. 

இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே அங்கிருந்து 2 பேரும் மாயமாகி விட்டனர்.


விபத்து நடந்த இடத்தை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், பார்வையிட்டனர். அங்கு ஒரு பையில், 450 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் பற்றிய விசாரணை  மேற்கொண்டதில்,  புதுச்சேரி மூலக்குளம் சாலை வீதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சரத்குமார் (வயது 20), புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் கோவிந்தசாமி (வயது 20) என்பது தெரியவந்தது. 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து,  இருவருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்