உதவி செய்யப்போய் உதைவாங்கிய வாலிபர்

உதவி செய்யப்போய் உதைவாங்கிய வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-03 16:55 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் தங்கப்பாநகரை சேர்ந்த ராஜ்துரை மகன் முத்துக்குமார் (வயது25). மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் பெட்ரோல் இல்லாமல் வாகனத்தை தள்ளி சென்றாராம். அந்த மர்ம நபர் முத்துக்குமாரிடம் உதவி செய்யுமாறு கேட்டபோது அவர் தனது வாகனத்தை வைத்து தள்ளி சென்று பெட்ரோல் பங்க்கில் விட்டுள்ளார். தக்க சமயத்தில் முத்துக்குமார் செய்த உதவியால் மகிழ்ந்து போன மர்ம நபர் அவரின் செல்பொன் எண்ணை வாங்கி விருந்து வைக்க அழைத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று சென்ற முத்துக்குமாரை குண்டுக்கரை முருகன் கோவில் பகுதியில் வைத்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு முத்துக்குமாரை 3 பேர் சேர்ந்து தாக்கினார்களாம். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்