ஈரோடு வைராபாளையத்தில் அடர்வனம் அமைக்கும் பணி; மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்

ஈரோடு வைராபாளையத்தில் அடர்வனம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-07 21:57 GMT
ஈரோடு
ஈரோடு வைராபாளையத்தில் அடர்வனம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.
அடர்வனம் அமைக்கும் பணி
தி.மு.க. தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. அதன்படி ஈரோடு மாநகராட்சி சார்பில் வைராபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் 3.41 ஏக்கர் நிலத்தில் அடர்வனம் அமைக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் விஜயகுமார், மண்டல பொறியாளர் ஜோஸ் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
10 ஆயிரம் மரக்கன்றுகள்
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி 1-ம் மண்டல தலைவர் பழனிசாமி, பகுதி செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதுகுறித்து மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமார் கூறியதாவது:-
வைராபாளையம் குப்பை கிடங்கு அருகில் மக்காத குப்பை 1.25 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனை பயோ மைனிங் முறையில் பிரிக்கும் பணி நடைபெற்றது. இதனால் 3.41 ஏக்கர் நிலத்தில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போது, இந்த இடத்தில் அடர்வனம் அமைக்க திட்டமிடப்பட்டு, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதன் பராமரிப்பினை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கிறது. மரக்கன்றுகளை பராமரிக்க ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சொட்டு நீர்பாசனம் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்