15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

திருவாரூரில் விதிமுறைகளை மீறி 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-05-10 18:45 GMT
திருவாரூர்;
திருவாரூரில் விதிமுறைகளை மீறி 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காற்று ஒலிப்பான்கள்
வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன் எனப்படும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்த வட்டார போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. ஆனால் சமீப காலமாக, இந்த தடையை மீறி தனியார் மற்றும் அரசு பஸ்களில் காற்று ஒலிப்பான் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக பரவலான புகார்கள் எழுந்தது.
இந்த காற்று ஒலிபான் சத்தத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி மேற்பார்வையில் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் மற்றும் அதிகாரிகள் திருவாரூர் நகரில் ஆய்வு செய்தனர். 
பறிமுதல்
ஆய்வின் போது விதிகளுக்கு புறம்பாக பல அரசு மற்றும் தனியார் பஸ்களில் காற்று ஒலிப்பான் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 15 அரசு மற்றும் தனியார் பஸ்களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி கூறியதாவது 
காற்று ஒலிப்பான்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 தனியார், அரசு பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்யப்பட்டு எச்சரித்து விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது. இதனை மீறி மீண்டும் காற்று ஒலிப்பானை பயன்படுத்தினால அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


மேலும் செய்திகள்