வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-05-10 17:33 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணியின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-  ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கான விண்ணப்பங்களை சேகரித்து அதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு மடிநோய் மற்றும் செயற்கை கருவூட்டல் பணி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்   கடன், விவசாய கடன் அட்டை வழங்கும் பணி மேற்கொள்ள வேண்டும்.

பயிர் காப்பீடு திட்டம்

 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீடு திட்டம் குறித்தும், வேளாண் தொடர்பான அனைத்து திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மண்டல கால்நடை இணை இயக்குனர் மனோகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், விஜயராகவன், தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா, முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை உதவி இயக்குனர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்