தர்மபுரியில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை போலீசார் விசாரணை

தர்மபுரியில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-10 17:51 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இரும்பு கம்பியால் தாக்குதல்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு நேற்று இரவு 10 மணிக்கு 2 வாலிபர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலையில் சரமாரியாக தாக்கினார். 
இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த வாலிபர் இறந்து விட்டது தெரியவந்தது. 
போலீசார் விசாரணை
 இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் யார்?. எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று இரவு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்