மின்சாரம் தாக்கி பெண் பலி

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

Update: 2022-05-10 17:54 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி தீபா. தேவராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தீபா வீடு கட்டி வசித்து வருகிறார். தீபாவின் தாயார் ஈஸ்வரி (வயது 47). ஆந்திர மாநிலம் பூதலூர் அடவி பகுதியை சேர்ந்தவர். இவர் தனது மகளை பார்க்க கடந்த வாரம் ஆம்பூர் வந்திருந்தார்.  

நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காத ஈஸ்வரி மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் ஈஸ்வரி வீடு திரும்பாததால் தீபா அவரை தேடி சென்றார். அங்கு கீழே விழுந்து கிடந்த தாய் ஈஸ்வரியை மீட்க முயன்றபோது தீபாவையும் மின்சாரம் தாக்கியது.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்