பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மாப்பிள்ளை

நெல்லிக்குப்பத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மாப்பிள்ளையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-10 17:56 GMT
நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணும், வாலிபரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் அந்த பெண் தனது புகைப்படத்தை வாலிபரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். 

இந்த நிலையில் திடீரென்று அந்த பெண்ணின் சொத்தை தனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என வாலிபர் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் நிச்சயிக்கப்பட்ட பெண் யார் வீட்டுக்கும் செல்லக்கூடாது, அவர்களின் உறவினர்கள் யாரும் திருமணத்திற்கு வரக்கூடாது என கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அந்த பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறினார். இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரை தொடர்பு கொண்டு எங்களது புகைப்படத்தை ஏன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளீர்கள் என கேட்டார். ஆனால் அதற்கு அந்த வாலிபர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. இது குறித்து அந்தப் பெண் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்