வேப்பனப்பள்ளியில் நிதி நிறுவனம் நடத்தி 38 பேரிடம் ரூ.2.69 கோடி மோசடி தம்பதி மீது வழக்கு

வேப்பனப்பள்ளியில் நிதி நிறுவனம் நடத்தி 38 பேரிடம் ரூ.2 கோடியே 69 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-05-10 18:03 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளியில் நிதி நிறுவனம் நடத்தி 38 பேரிடம் ரூ.2 கோடியே 69 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிதி நிறுவனம் 
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அருகே உள்ள திம்மசந்திரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). பால் வியாபாரி. வி.மாதேப்பள்ளி பெரிய சூலாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46), இவரது மனைவி முனிரத்தினம் (40). இவர்கள் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் ரூ.14 லட்சம் டெபாசிட் செய்தார். இதையடுத்து கடந்த மாதம் அந்த பணத்தை செல்வராஜ் கேட்டுள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியும், முனிரத்தினமும் பணம் கொடுக்க மறுத்து செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
தம்பதி மீது வழக்கு 
இது தொடர்பாக செல்வராஜ் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி, முனிரத்தினம் ஆகியோர் இதேபோல் நிதி நிறுவனம் மூலம் 38 பேரிடம் ரூ.2 கோடியே 69 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி முனிரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்