சாலைேயாரம் நின்ற 2 பேரை பலி வாங்கிய கார்

மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக்கொண்டு இருந்த 2 பேர் கார் மோதி பலியானார்கள். மேலும் அந்த கார், பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

Update: 2022-05-10 18:42 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக்கொண்டு இருந்த 2 பேர் கார் மோதி பலியானார்கள். மேலும் அந்த கார், பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
2 பேர் மீது மோதிய கார் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 31). ராஜபாளையம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (35). இருவரும் எலக்ட்ரீசியன்கள்.
இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டயதேவன்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர். 
லட்சுமியாபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது, அங்குள்ள ஒரு பாலத்தின் அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கேரளாவிலிருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென, சாலை ஓரத்தில் நின்றிருந்த 2 பேர் மீதும் பயங்கரமாக மோதிவிட்டு, பாலத்தில் இருந்து பாய்ந்து கவிழ்ந்து கிடந்தது. 
 பரிதாப சாவு
இந்த விபத்தில் எலக்ட்ரீசியன்கள் அய்யனார், ராமசுப்பிரமணியன் ஆகிேயார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் பள்ளத்தில் பாய்ந்த காரில் 6 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
பலியானவர்களின் உடல்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்