மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பலாத்காரம்; முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார்.

Update: 2022-05-10 18:45 GMT
கரூர், 
சிறுமி பலாத்காரம்
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 16 வயது சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 66) என்ற முதியவர் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்றார். பின்னர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கின் விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதற்கான தீர்ப்பினை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு நேற்று வழங்கினார். அதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்