போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததால் சிக்கினார்: போலீசார் அபராதம் விதித்ததால் தீக்குளிக்க முயற்சி

போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரை போலீசார் பிடித்து அபராதம் விதித்ததால் ஆத்திரத்தில் தீக்குளிக்க போவதாக ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-05-11 09:12 GMT
பெரம்பூர்,  

சென்னை வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜகோபால் தலைமையில் போக்குவரத்து போலீசார் வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பேசின்பிரிட்ஜ் சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

மேலும் அவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக போலீசாரை மிரட்டி உள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் சுதாகரித்து கொண்டு குடிபோதை ஆசாமியை மடக்கிப்பிடித்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றி அனுப்பினர். குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து போக்குவரத்து போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்