வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் சாவு

தேவதானப்பட்டி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-11 14:21 GMT
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள அட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 70). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு ராமன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இந்தநிலையில் பெரியகுளம்-வத்தலகுண்டு மெயின்ரோட்டில், அட்டணம்பட்டி பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் தேவதானப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாய்க்காலுக்குள் ராமன் பிணமாக கிடந்தார். 

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

முன்னதாக ராமன் உடலை சோதனை செய்தபோது, அவரது இடுப்பில் அணிந்திருந்த ெபல்ட்டில் ரூ.60 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாலையோரத்தில் உள்ள மரத்தில் புளியம்பழம் சேகரிக்க சென்ற ராமன், வாய்க்காலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகள்