காலதாமதம் இல்லாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலதாமதம் இல்லாமல் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கினார்.

Update: 2022-05-11 16:56 GMT
கிருஷ்ணகிரி:
ஆய்வுக்கூட்டம் 
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
அவர் வருவாய்த்துறை திட்ட பணிகளான பட்டா, முதியோர் உதவித்தொகை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி நீர்நிலைகள், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
 15 வார காலத்திற்குள்...
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலதாமதம் இல்லாமல் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றம், திருத்தம் குறித்து பொதுமக்களிடம் பெறப்பட்ட நிலுவையில் உள்ள மனுக்களை 15 வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன் மற்றும் துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்