75 வயது மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா

75 வயது மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது

Update: 2022-05-11 17:31 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது குத்தாலம் தாலுகா, வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75) தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த கலெக்டர் லலிதா நேற்று கோவிந்தம்மாளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். அப்போது கலெக்டர் கூறுகையில், கடந்த 9-ந் தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்லியநல்லூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கோவிந்தம்மாள் கூரை வீட்டில் வசித்து வருவதாகவும், தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இவரது கணவர் உத்திராபதி ஏற்கனவே இறந்து விட்டார். இவரது இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. அவரது மகனும் இறந்து விட்டார். இதனால், தனியாக வசித்து வந்த கோவிந்தம்மாள் அக்கம்பக்கத்தினர் தனது இடத்தை ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மனு அளித்தார். அந்த மனு பரிசீலிக்கப்பட்டு அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு கோவிந்தம்மாள் பெயரில் மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், குத்தாலம் தாசில்தார் கோமதி, மண்டல துணை தாசில்தார் சுந்தர், வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்