கறம்பக்குடி அருகே சாலையின் குறுக்கே பறந்து சென்ற மயில் பஸ் மீது மோதி உயிரிழப்பு முகப்பு கண்ணாடி உடைந்தது

சாலையின் குறுக்கே பறந்து சென்ற மயில் பஸ் மீது மோதி உயிரிழந்தது.

Update: 2022-05-11 18:00 GMT
கறம்பக்குடி:
கறம்பக்குடியில் இருந்து மழையூர் வழியாக ஆலங்குடிக்கு அரசு டவுன் பஸ் சென்றுகொண்டிருந்தது. ஆண்டி குளப்பன்பட்டி சாலையில் சென்றபோது அப்பகுதி தைலமரக்காட்டில் இருந்து வேகமாக சாலையின் குறுக்கே பறந்து வந்த ஆண்மயில் பஸ்சின் முகப்பு கண்ணாடியின் மீது மோதியது. மயில் மோதிய வேகத்தில் கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் பலத்த காயமடைந்த மயில் பஸ்சின் முன் இருக்கையில் விழுந்து இறந்தது. இதையடுத்து அந்த பஸ் நடுவழியில் நிறுத்தபட்டு பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பஸ்சில் மோதி இறந்த மயில் சற்றுநேரத்திற்கு முன்தான் அப்பகுதியில் தோகை விரித்து ஆடியபடி நின்றது. இதை அப்பகுதியில் உள்ளவர்கள், சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மயில் பஸ்சில் மோதி இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்