மதுரை விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் ் தங்கம் சிக்கியது

மதுரை விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது. அதனை பச்சை நிற உருளைகளாக மாற்றி கடத்தி வந்த நெல்லை பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-11 19:47 GMT
மதுரை
மதுரை விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது. அதனை பச்சை நிற உருளைகளாக மாற்றி கடத்தி வந்த நெல்லை பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை விமான நிலையம்
கொரோனா கால கட்டத்திற்கு பின்னர், மதுரையில் இருந்து துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்த தனியார் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்க புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள், துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை தனித்தனியாக சோதனை செய்தனர்.
மேலும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணியின் நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனைதொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர். அப்போது அவர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
831 கிராம் தங்கம் பறிமுதல்
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், துபாய் விமானத்தில் வந்திறங்கிய நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த 40 வயது  பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. அவரிடம் பச்சை நிறத்தில் உருளை வடிவிலான பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்தபோது, அதில் களிமண் போன்ற பொருளுடன் தங்கத்துகள்கள் கலந்து கடத்தி வந்தது உறுதியானது. அந்த உருளைகளின் மொத்த எடை 1046 கிராம். அதனை தீயில் சுட்டு, பிரித்தெடுத்த பின்னர், 831 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன் மொத்த மதிப்பு ரூ.43 லட்சத்து 24 ஆயிரத்து 524 ஆகும். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.

மேலும் செய்திகள்