குடிபோதையில் பெண்களிடம் தகராறு செய்த நபருக்கு தர்ம அடி

குடிபோதையில் பெண்களிடம் தகராறு செய்த நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2022-05-13 19:56 GMT
புதுக்கோட்டை, 
பெண்களிடம் தகராறு
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் நடந்து சென்றுள்ளார். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்துள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்து வேகமாக ஓடினார். 
இதேபோல் அந்த வழியாக சென்ற பெண்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனைக்கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் மேலதானியம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்ததால் அவர் தள்ளாடியபடி நின்றார். அவரது வீட்டினர் மற்றும் உறவினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்து விவரம் கேட்டனர். குடிபோதையில் இருந்த அவரிடம் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக இருந்தது. அந்த நபரை போலீசார் விசாரணைக்கு பின் எச்சரித்து அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்