கோவில் நிர்வாகி திடீர் சாவு; போலீசார் விசாரணை

வடக்கன்குளத்தில் கோவில் நிர்வாகி திடீரென இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-13 22:01 GMT
வடக்கன்குளம்:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜா (வயது 56). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் நிர்வாக கமிட்டி துணை செயலாளராக இருந்தார். இவர் நேற்று மாலையில் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் சமீபத்தில் விழா நடத்தியது தொடர்பாக அவரிடம், மற்றொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் ராஜா, வடக்கன்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீட்டுக்கு சென்ற சிறிதுநேரத்தில் வெங்கடேஷ் ராஜா திடீரென்று இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் ராஜாவின் மகன் தினேஷ், இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
உடனே போலீசார் விரைந்து சென்று, வெங்கடேஷ் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே வெங்கடேஷ் ராஜா உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது கோவிலில் நிகழ்ந்த தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்