வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்தது.

Update: 2022-05-14 19:40 GMT
நொய்யல், 
நொய்யல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.  கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.250-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி  ரூ.120-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லை ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது. 
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ400-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.160-க்கும், ரோஜா ரூ.240-க்கும், முல்லை ரூ.340-க்கும், செவ்வந்தி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும் ஏலம் போனது. நொய்யல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திருவிழா நடைபெற்று வருவதாலும், வரத்து குறைவாலும், பூக்கள் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்