‘போக்சோவில்' கைதான வாலிபர் இளம்பெண்ணின் குழந்தைக்கு தந்தை இல்லை- கோர்ட்டு உத்தரவு

மரபணு பரிசோதனையில் ‘போக்சோவில்' கைதான வாலிபர், இளம்பெண்ணின் குழந்தைக்கு தந்தை இல்லை என்று தட்சிண கன்னடா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-15 16:28 GMT

மங்களூரு:

‘போக்சோவில்’ கைது

  தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா அருகே அசோக் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு மைனர் பெண்ணாக இருக்கும்போது அதேபகுதியை சேர்ந்த அக்சத் என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.

  இதனால் மைனர் பெண் கர்ப்பமானார். இதையடுத்து இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தர்மஸ்தலா போலீசார் அக்சத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை தட்சிண கன்னடா மாவட்ட கோர்ட்டில் இருந்து வந்தது.

மரபணு பரிசோதனை

  இதைதொடர்ந்து இளம்பெண்ணை கற்பழித்து தாயாக்கியதாக கைதான அக்சத்தின் மரபணுவையும், பிறந்த குழந்தையின் மரபணுவையும் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கையும் வந்தது. அந்த மரபணு பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
  அதாவது அக்சத்துக்கும், இளம்பெண்ணின் குழந்தையின் மரபணுவும் ஒத்துபோகவில்லை. இதனால் அக்சத் குழந்தையின் தந்தை இல்லை என்பது தெரியவந்தது.

வாலிபர் தந்தை இல்லை

  இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. அப்போது மரபணு பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பெற்று கொண்ட நீதிபதி கற்பழித்து இளம்பெண்ணை தாயாக்கியதாக கைதான அக்சத் மற்றும் பிறந்த குழந்தையின் மரபணு ஒத்துபோகவில்லை, அதனால் குழந்தைக்கு அக்சத் தந்தை எல்லை என்று உத்தரவிட்டார்.

  மேலும் இளம்பெண்ணின் குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார். இதனால் இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்