மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி திருவிழா

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி திருவிழா நேற்று நடைபெற்றது.

Update: 2022-05-16 19:21 GMT
மணப்பாறை, மே.17-
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி திருவிழா நேற்று நடைபெற்றது.
வேடபரி திருவிழா
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இரவில் அம்மன் குதிரை வாகனத்தில் வேடபரி திருவீதி உலா வந்தார்.  ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் ராஜவீதிகளின் வழியாக வேடபரி வாகனம் கோவிலை வந்தடைந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தீப்பந்தம் ஏந்தி ஆடினர்
வேடபரி நிகழ்ச்சி தொடங்கும் முன் பாரம்பரிய கலைகளாக நெருப்பு தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சிலம்பம் என பல்வேறு நடனங்கள் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் கிடா, கோழி வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.
 இதே போல் பலரும் கரும்பில் தொட்டில் கட்டி பிள்ளைகளை சுமந்து வந்தனர். நாளை (புதன் கிழமை) காலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகி்றது.

மேலும் செய்திகள்