குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-16 22:06 GMT

பெரம்பலூர்:

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் உள்ள காலனி தெருவுக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை லெப்பைக்குடிகாடு-அகரம்சீகூர் மெயின்ரோட்டில் அத்தியூர் பிரிவு சாலை பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மங்களமேடு போலீசாரும், வருவாய்த்துறையினரும், அத்தியூர் ஊராட்சி நிர்வாகத்தினரும் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

மேலும் செய்திகள்