2023 உலக கோப்பை; நாட்டின் மிக பெரிய ஆக்கி ஸ்டேடியம் ஒடிசாவில் அமைகிறது
2023 உலக கோப்பையை முன்னிட்டு ஒடிசாவில் நாட்டின் மிக பெரிய ஆக்கி ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது.
புவனேஸ்வர்,
2018ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 13ந்தேதி முதல் 29ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் 2023 உலக கோப்பையை நடத்த ஒடிசா அரசு முன்வந்துள்ளது.
இதுபற்றி ஒடிசாவின் விளையாட்டு செயலாளர் வினீல் கிருஷ்ணா கூறும்போது, ஒடிசாவில் ஆக்கி போட்டி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான எண்ணற்ற பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதற்காக புவனேஸ்வரில் கலிங்கா ஆக்கி ஸ்டேடியத்தில் மேம்பாட்டு பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இதேபோன்று, சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைய உள்ளது. இது இந்தியாவின் மிக பெரிய ஆக்கி ஸ்டேடியம் ஆக இருக்கும்.
இந்த கட்டுமான பணியில் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 250க்கும் கூடுதலானோர் பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்டு அக்டோபருக்குள் ஸ்டேடியம் தயாராகி விடும் என ஒடிசா விளையாட்டு துறை தெரிவித்து உள்ளது.