காப்பகத்தில் சிறுவர்கள் பாலியல் பலாத்காரம்- கொலைகள் ; 70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது

மத்திய பிரதேச மாநிலம் போபால் காப்பகத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்து உள்ளது என்ற புகாரை தொடர்ந்து 70 வயது முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2018-09-15 08:19 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின்  உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. கடுமையான துஷ்பிரயோகம் காரணமாக அவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர். புகாரின் அடிப்படையில்  உரிமையாளரான  70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் கூறி உள்ளனர்.

இந்த காப்பகத்தைச் சேர்ந்த  மூன்று சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும்  சமூக நீதித்துறைக்கு சென்று தங்கள் புகாரை அளித்துள்ளனர். இந்த புகாரை சமூக நீதித்துறை போலீசுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

காப்பகத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதால் அதிகப்படியான இரத்தப்போக்கில் சிறுவன் ஒருவன் இறந்து உள்ளான் . மற்றொருவன் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளான். மூன்றவதாக ஒரு சிறுவன் கடும் குளிரில் இரவு முழுவதும் வெளியே நிற்க வைத்ததால் இறந்ததாக சிறுவர்களும், சிறுமிகளும் புகார் அளித்து உள்ளனர். 

காப்பகம் அரசு நிதி பெற்று 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இதில் 2003 ல் இருந்து 42 சிறுவர்கள் மற்றும் 58 சிறுமிகள் தங்கி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் நான்கு ஆசிரியர்கள்  இருந்த  காப்பகத்தில்  முழு நேரமும்  வார்டன்  காப்பகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் முதல் மந்திரி ஒவ்வொரு தங்குமிடத்தையும், அனாதை இல்லத்தையும் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். மேலும் தனியார் பெண்கள் விடுதிகளுக்கு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநிலம் முஷாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்ட  காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகளை அங்குப் பணியாற்றும் ஊழியர்களே பல நேரங்களில் பலாத்காரம் செய்துள்ளனர்.  சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் கொன்றுள்ளனர் என்ற தகவல் சம்பவம் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்