முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பிரதமர் மோடி

முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2018-12-22 15:27 GMT
காந்திநகர்,

குஜராத்தின் காந்திநகரில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் 5வது தேசிய மகளிரணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அதில் அவர் பேசும்பொழுது, கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு வாய்ப்புகளை ஆய்வுசெய்த பின் நாட்டிலுள்ள பெண்கள் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பு ஆண்ட அரசுகள் பெண்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கூட எதனையும் செய்யவில்லை.  பெண்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.  வாக்குறுதிகளையே அவர்கள் அளித்து வந்தனர்.  சமூகத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் மனநிலையில் மாற்றம் ஆகியவை வரும்வரை சரியான நேரத்திற்காக ஆட்சி செய்தவர்கள் காத்திருந்து உள்ளனர்.

கடந்த 4 வருடங்களில் பெண் குழந்தைகள் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் சமூகத்தின் பார்வை நல்ல முறையில் மாறியுள்ளது.

முதன்முறையாக, அரசின் முக்கிய திட்டங்கள் பெண்களை கவனத்தில் கொண்டு உள்ளது.  தூய்மை இந்தியா திட்டம், உஜ்வாலா திட்டம், பெண்களை காப்போம் பெண்களுக்கு கல்வி அளிப்போம், பிரதமர் ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும் என அவர் கூறினார்.

நாட்டில் ஆண் மற்றும் பெண் பாலின விகிதம் முன்னேற்றம் அடைந்துள்ளது.  பெண்களுக்காக 18 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன.  விமான படையில் போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.  கப்பற்படையில் மகளிர் குழு உள்ளது.  சிறுமிகள் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்