இளம் வயதில் தேஜஸ் விமானத்தில் பயணித்த பி.வி.சிந்து!!

பெங்களூருவில் நடக்கும் சர்வதேச விமான கண்காட்சியில், இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பயணித்தார்.

Update: 2019-02-23 10:16 GMT
பெங்களூரு,

சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில், 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 365 நிறுவனங்களின் கண்காட்சி மையங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்துகின்றன.

இன்று 4-வது நாள் நிகழ்ச்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பயணித்தார். 

பச்சை நிற சீருடை அணிந்து வந்த பி.வி.சிந்து, விமானத்தில் ஏறும் போது பார்வையாளர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் விமானத்தின் காக்பிட் பகுதியில் அமர்ந்து சிறிது நேரம் பயணித்தார்.  இளம் வயதில் தேஜஸ் விமானத்தில் துணை விமானியாக பயணித்தது பி.வி.சிந்துதான். 

முன்னதாக ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று முன்தினம் தேஜஸ் விமானத்தில் பயணித்தார். இந்த விமான கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்