கேரளாவில் மனைவி உள்பட 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் தற்கொலை
கேரளாவில் மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொச்சி,
கேரளாவில் கலமசேரி பகுதியில் வசித்து வந்தவர் சாஜி (வயது 31). இவரது மனைவி பிந்து (வயது 29). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஸ்ரீஹரி என்ற ஆண் குழந்தை உள்ளது. சாஜி ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சாஜி, தனது மனைவி மற்றும் குழந்தை மீது தீ வைத்து கொளுத்தியுள்ளார். அவர்களின் சத்தம் கேட்டு சாஜியின் மாமியார் ஆனந்தவல்லி அங்கு வந்துள்ளார். அவர் மீதும் தீ வைத்து விட்டு குளியலறைக்கு சென்று சாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப விவகாரத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.