மே மாதத்தில் மத்திய அரசுக்கு ரூ. 1,00,289 கோடி ஜி.எஸ்.டி. வரி வருமானம்

மே மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு ரூ. 1,00,289 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-01 17:17 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் பல்வேறு வரிகளை ஒருங்கிணைத்து ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை என்கிற ஒரே வரியாக மத்திய, மாநில அரசுகள் வசூலித்து வருகின்றன.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. பின்னர், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரி வருவாயும் அதிகரித்தபடி இருந்தது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1,13,865 கோடி வருமானம் மத்திய அரசுக்கு கிடைத்தது.

இந்நிலையில், மே மாத ஜி.எஸ்.டி. வரி வருவாய் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதில், மே மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு ரூ. 1,00,289 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.67 சதவீதம் அதிகம் ஆகும்.

இதில் சி.ஜி.எஸ்.டி. ரூ.17,811 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.24,462 கோடி, ஐ.ஜி.எஸ்.டி. ரூ.49,891 கோடி (இறக்குமதி வரி ரூ.24,875 உள்பட) வசூலாகி உள்ளது. செஸ் வரி மூலம் 8 ஆயிரத்து 125 கோடி ரூபாய் (இறக்குமதி வரி ரூ.953 கோடி உள்பட)  வருவாய் கிடைத்திருக்கிறது.

மேலும் மே மாதம் மொத்தம் 72.45 ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்