ப.சிதம்பரம் விவகாரம்: முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது - ராகுல் காந்தி பாய்ச்சல்

ப.சிதம்பரம் விவகாரத்தில் முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2019-08-21 09:36 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றதால் நேற்று  பரபரப்பு ஏற்பட்டது. இன்று அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத வகையில் அமலாக்கப்பிரிவும், சிபிஐ அமைப்பும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் சில முதுகெலும்பில்லாத ஊடகங்களைப் பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கடுமையான வார்த்தைகளால் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "பிரதமர் மோடியின் அரசு அமலாக்கப்பிரிவு, சிபிஐ மற்றும் சில முதுகெலும்பில்லாத ஊடகங்களைப் பயன்படுத்தி ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்