பாலியல் பலாத்கார குற்றவாளி ஜாமீனில் வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
பாலியல் பலாத்கார குற்றவாளி ஜாமீனில் வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
லக்னோ:
பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் இது போல் ஜாமீனில் வந்தவர்களால் 3 பெண்கள் தீவைத்து எரிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பெண் தீவைத்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளி, ஜாமீனில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
பீகாரை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவரும் ஜாமீனில் வந்த தனது காதலனால் ரேபரேலியில் தீவைத்து எரிக்கப்பட்டார்.
இதுபோல் உத்தரபிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், நேற்று உன்னாவ் பகுதியில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வந்துள்ளார். அலுவலகத்திற்கு வெளியே சென்ற அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்தப் பெண், மீட்கப்பட்டு கான்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விசாரணையில் அந்தப் பெண், தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்திருப்பதும், காதலன் முன்ஜாமீன் பெற்றதால் ஆத்திரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதுபற்றி உன்னாவ் எஸ்பி விக்ராந்த் வீர் கூறும்போது, ‘தீக்குளித்த பெண் ஹாலட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நீதிபதி முன்னிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்து வருகிறோம்.
அந்த பெண் தன்னுடன் பழகிய நபர் மீது கடந்த அக்டோபர் 2-ம் தேதி கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன்பின்னர் குற்றவாளி, நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார். இருவரும் 10 ஆண்டுகளாக பழகி உள்ளனர். திருமணம் செய்ய மறுத்ததையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் வெளியிடப்பட்டுவிட்டது’ என்றார்.