மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்.மந்திரிகள் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் மந்திரிகள் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுடெல்லி,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரி பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் 31 நாட்களுக்கு பிறகு நேற்று மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. விதான் பவன் வளாகத்தில் நடந்த இந்த விழாவில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இவர் உள்பட 36 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.
இவர்களில் 10 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். புதிதாக மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட இந்த 10 பேரும் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.