சபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு

சபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-01-13 07:56 GMT
புதுடெல்லி

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், சபரிமலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று  முதல் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று விசாரணை தொடங்கியது.

வழக்கில் தன்னை நேரடியாக வாதிட அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை தலைமை தந்திரி கோரிக்கை  வைத்தார்.

அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே,

இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல. சபரிமலை கோவில் பிரச்சினையில் நவம்பர் 14 ம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிப்போம். அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க இருக்கிறோம்.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற 50 சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை. கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு  முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க இருக்கிறோம் என  கூறினார்.

இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்  வழக்கை 3 வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்