திருப்பதி கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு

திருப்பதி கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு வழங்கப்படுகிறது.

Update: 2020-01-20 21:34 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு சிறப்பு வாய்ந்ததாகும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக செல்லும் இலவச தரிசன பக்தர்கள், ‘டைம் ஸ்லாட் கார்டு’ பெற்று இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள், மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு சலுகை விலையில் லட்டு வழங்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏழுமலையானை வழிபடும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. லட்டை, பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இலவச லட்டு பெற வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் அட்டை வழங்கப்படுகிறது. கோவிலின் பின்பக்கம் உள்ள கவுண்ட்டர்களில் அந்த அட்டையை கொடுத்து இலவச லட்டு பிரசாதத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்