மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த ரிக்‌ஷா தொழிலாளியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி !

மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த ரிக்‌ஷா தொழிலாளியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Update: 2020-02-18 05:33 GMT
(Photo Credit ; ANI Twitter)
வாரணாசி,

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்பவர் மங்கல் கெவத். இவர் பிரதமர் மோடியால் தத்து எடுக்கப்பட்ட டோம்ரி கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.  அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியிடமிருந்து வாழ்த்துக்கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் திருமண பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கு தனது வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும்  பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பு கடிதம் கிடைத்தது குறித்து மங்கல் கெவத் கூறுகையில், எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் மோடிக்கும் அழைப்பு விடுக்க கூறினார்கள். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கும் வாரணாசியில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பினேன்.

ஆனால் அவரிடமிருந்து பதில் வரும் என்று நான் நினைக்கவில்லை. அந்த கடிதம் எனக்கு கிடைத்த உடன் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். எனது உறவினர்களிடம் பிரதமர் மோடியின் கடிதத்தை காண்பித்து மகிழ்ச்சியுற்று வருகிறேன்“ என்றார்.

இந்த நிலையில்,  வாரணாசி பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மகளின் திருமணத்திற்கு அழைப்புக்கடிதம் அனுப்பிய ரிக்‌ஷா தொழிலாளியை நேரில் சந்தித்தார். அப்போது, மங்கல் கெவத்தின்  ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார். தூய்மை இந்தியா இயக்கத்துக்காக ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத்தின் பங்களிப்புக்காக பிரதமர் மோடி அவரைப் பாராட்டினார். மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட  மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றுக் கரையைத் தானே சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகள்