பொறியியல் கல்வியில் வேதியியல் கட்டாய பாடமாக தொடர்ந்து நீடிக்க வேண்டும்; வைகோ கோரிக்கை

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

Update: 2020-03-05 23:07 GMT
புதுடெல்லி, 

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப்பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெற்று இருக்கிறது. அண்மையில், இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, மேல்நிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேதியியல் மதிப்பு எண்களை கணக்கிட வேண்டியது இல்லை என தெரிவித்து இருக்கிறது.

இந்த அறிவிப்பு கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களை கடுமையாக பாதிப்பதுடன், மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பயிற்றுவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வேலைவாய்ப்பினை இழக்கவும் வழிவகுத்துள்ளது.

வேதியியல் கட்டாயப்பாடம் என்பது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்த தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், வேதியியல் விருப்பப்பாடம் இல்லை என்றால், அதனால், கலை கல்லூரிகளும், பி.எஸ்.சி. வேதியியல் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே, இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வெளியிட்டுள்ள அறிவிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டு, பொறியியல் கல்விக்கான சேர்க்கைகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியலை கட்டாய தேர்வு பாடங்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்