நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மும்பையில் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் ஒரு வாரம் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2020-08-09 10:49 GMT
மும்பை,

மும்பையில் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்களாக பெய்த கனமழையால் நகர மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். அதையடுத்து வியாழக்கிழமை முதல் மழை குறைந்துள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நாளை முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் ஹோசிலிகர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை நாளை (திங்கட்கிழமை) அல்லது நாளை மறுநாள் முதல் மீண்டும் தீவிரமடைய உள்ளது. இதனால் மும்பை உள்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை ஒரு வார காலத்துக்கு நீடிக்கலாம்” என்றார்.

ஆண்டுதோறும் மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் 58.52 செ.மீ. மழை தான் பெய்வது வழக்கம். ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் அதைவிட அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது. அதாவது கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மும்பையில் 59.76 செ.மீ. மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்