பெங்களூரு வன்முறை தொடர்பாக மேலும் 35-பேர் கைது

பெங்களூரு வன்முறை தொடர்பாக இதுவரை 340- பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2020-08-16 03:29 GMT
பெங்களூரு,

பெங்களூரு புலிகேசிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் அக்காள் மகன் நவீன் (வயது 27). இவர் சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், காவல் பைரசந்திராவில்  கடந்த  11 ஆம் தேதி வன்முறை வெடித்தது. 

இந்த வன்முறை சம்பவம் குறித்து டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.  முகநூலில் அவதூறு கருத்து பதிவு செய்தது குறித்து நவீனிடம் போலீசார் விசாரித்தனர். 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையில்  அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான் என்று நவீன் ஒப்புக்கொண்டார்.  தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதற்கிடையே, இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக  மேலும் 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 340- ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்