திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

Update: 2020-10-18 03:12 GMT
திருப்பதி,

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாக்களை கோவிலுக்குள் ஏகாந்தமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக கோவிலுக்குள் நடைபெற்றது.

இந்தநிலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. வரும் 24-ம் தேதிவரை நடைபெற உள்ள இவ்விழாவையும் ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வழக்கமாக மாட வீதிகளில் நடைபெறும் வாகன சேவைகள் இப்போது கோயிலுக்குள் உள்ளசம்பங்கி மண்டபத்தில் நடத்தப்படுகிறது.

நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் ஏழுமலையான் கோவிலில் ஆகமசாஸ்திரங்களின்படி அங்குரார்பன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், சுவாமியின் சேனாதிபதியான விஸ்வகேசவர் எழுந்தருளி பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளினார். கோவில் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.

கோவிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி நவராத்திரி  பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார். கல்யாண மண்டபத்தில் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி  அருள்பாலித்தார். இதில் கோவில் ஜீயர்கள் , அர்ச்சகர்கள்  தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். அன்ன வாகனம் என்பது பாலையும் நீரையும் பிரிக்கும் குணம் கொண்டது. அன்ன வாகனத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை வழிபட்டால் அகம்பாவத்தை குறைத்து நல்ல எண்ணத்தை அருள் பாலிப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், ஆன்லைனில் கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு மட்டும் சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்