ஹூப்ளி அருகே : கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து 10 பெண்கள் உள்பட 11 பேர் பலி
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஹூப்ளி
கர்நாடக மாநிலம் தவனகரே பகுதியிலிருந்து 16 பெண்கள் விடுமுறைய கழிக்க வேன் ஒன்றில் கோவா நோக்கிச் சென்றுள்ளனர். லிட்டிகட்டி என்ற இடத்தின் அருகே எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் இரண்டு வாகனங்களுமே அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்தது. சுற்றுலா வேனின் டிரைவர் பிரவீன் மற்றும் வேனில் இருந்த 10 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலியானவர்கள் ஆஷா, மீராபாய், பரஞ்ஜோதி, ராஜேஸ்வரி, சகுந்தலா, உஷா, வேதா, வீணா, மஞ்சுளா, நிர்மலா, ரஜனீஷ், சுவாதி ஆகியோர் என அடையாலம் காணப்பட்டு உள்ளது. ஐந்து பெண்கள் மற்றும் டிப்பர் டிரக்கின் டிரைவர் பலத்த காயம் அடைந்து தற்போது ஹூப்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்களில் தவனகரே ஜகலூரைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மருமகள், பிரீத்தி ரவிக்குமாரும் ஒருவர் ஆவார். முன்னாள் எம்.எல்.ஏ குரு சித்தனகவுடாவின் மருமகள் ஆவார்.
11 பேரின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் சாலை விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தம். இந்த சோகமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக பிரார்த்தனை செய்கிறேன் என கூறி உள்ளார்.